டிராக்டரில் மணல் கடத்தல்: போட்டி போட்டு ஓட்டியதில் பைக் மீது மோதியது - 2 பேர் பலி


டிராக்டரில் மணல் கடத்தல்: போட்டி போட்டு ஓட்டியதில் பைக் மீது மோதியது - 2 பேர் பலி
x

திருவாரூர் அருகே அனுமதியில்லாமல் மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த 2 டிராக்டர்கள் பைக் மீது மோதியதில் 2 பேர் பலியாகினர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த செம்படவன்காடு கிழக்கு கடற்கரை சாலையில் சிக்கன் கார்னர் உள்ளது. இதில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஹாஜா நகரை சேர்ந்த ஹபிபுல்லா மகன் பயாஸ் அகமது (வயது 22), அதிராம்பட்டினம் சின்ன நெசவுதெருவை சேர்ந்த அப்துல் காதர் மகன் ஷகீல் அகமது (18) ஆகிய இருவரும் வேலை பார்த்து வந்தனர்.

நேற்றிரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு பைக்கில் இருவரும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது முத்துப்பேட்டை அருகே பாமணி ஆற்று பாலத்தில், எதிரே அனுமதியில்லாமல் மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த 2 டிராக்டர்கள் ஒன்றோடு ஒன்று போட்டிபோட்டுக்கு கொண்டு முன்னே சென்றது. இதில் ஒரு டிராக்டர் வாலிபர்கள் இருவரும் சென்ற பைக் மீது மோதியது.

இதில் பயாஸ் அகமது, ஷகீல் அகமது ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனைக்கண்ட அப்பகுதியினர் இருவரையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை போலீசார் விபத்து ஏற்படுத்திய இரண்டு டிராக்டரையும் பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த முத்துப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியை சேர்ந்த டிரைவர் கார்த்தி(38) என்பவரை கைது செய்தனர். மற்றொரு டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story