கடலூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு


கடலூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
x

கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

கடலூர் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், இராசாக்குப்பம் மதுரா, ரோட்டான்டிக்குப்பம் கிராமம், விருத்தாசலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலை அருகே இன்று (21-8-2023) மதியம் கடலூரிலிருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற தனியார் பேருந்தும், வடலூரிலிருந்து குறிஞ்சிப்பாடி நோக்கி வந்த காரும் எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், விபத்து நடந்த நேரத்தில் அவ்வழியாக வடலூரிலிருந்து குறிஞ்சிப்பாடிக்கு சென்ற இருசக்கர வாகனத்தின் மீதும் பேருந்து மோதியுள்ளது.

இவ்விபத்தில் காரில் பயணம் செய்த விக்டோரியா, க/பெ.அந்தோணிசாமி (வயது 65) என்பவரும், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த புவனகிரி வட்டம், சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், த/பெ.ஏழப்பன் (வயது 24) மற்றும் தாமரைச்செல்வன், த/பெ.கோதண்டபாணி (வயது 23) ஆகிய மூவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story