பாதுகாப்பு இல்லத்தில் இருந்து சிறார்கள் தப்பியோடிய விவகாரம் - மணலியில் 2 பேர் கைது


பாதுகாப்பு இல்லத்தில் இருந்து சிறார்கள் தப்பியோடிய விவகாரம் - மணலியில் 2 பேர் கைது
x

சென்னை மணலி பகுதியில் மேலும் இரு சிறார்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

வேலூர் காகித பட்டறை பகுதியில் உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து கடந்த மார்ச் 27-ந்தேதி 6 இளம் சிறார்கள் தப்பியோடினர். இவர்களை பிடிப்பதற்காக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதனிடையே தப்பியோடிய சிறார்களில் ஒருவரை கடந்த மார்ச் 31-ந்தேதி சென்னையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு சென்னை மணலி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 2 இளம் சிறார்கள் குற்றச்செயலில் ஈடுபட முயன்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த 2 இளம் சிறார்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பியோடிய சிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

வேலூர் மாவட்ட அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பியோடிய 6 சிறார்களில், 3 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ள 3 பேரையும் தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.



Next Story