திருவொற்றியூரில் என்ஜினீயரை பீர்பாட்டிலால் குத்திய 2 பேர் கைது


திருவொற்றியூரில் என்ஜினீயரை பீர்பாட்டிலால் குத்திய 2 பேர் கைது
x

திருவொற்றியூரில் என்ஜினீயரை பீர்பாட்டிலால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

தூத்துக்குடியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 38). இவர், சென்னை திருவொற்றியூரில் புதியதாக சூரை மீன்பிடி துறைமுக கட்டுமான பணியில் கடந்த 2 வருடங்களாக என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிகள் செய்து கொண்டு இருந்த போது திருவொற்றியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் தங்கள் படகை கரையில் தூக்கி வைப்பதற்கு கிரேன் வேண்டும் என கேட்டனர். அதற்கு ராஜ்குமார், தற்போது வேலை நடந்து கொண்டு இருப்பதாகவும், வேலை முடிந்த பிறகு மாலை 6 மணிக்கு மேல் கிரேன் கொடுப்பதாகவும் கூறினார்.

பின்னர் வேலை முடிந்து வெளியே வந்த ராஜ்குமாரை வழிமறித்த இருவரும், "கிரேன் கேட்டால் தரமாட்டாயா?" என்று கூறி பீர் பாட்டிலால் அவரது முகம், மார்பு மற்றும் தலையில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமார், திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் தெருவைச் சேர்ந்த அபினேஷ் (19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனை கைது செய்தனர்.


Next Story