வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் 2 பேர் கைது
![வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் 2 பேர் கைது வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/05/28/1303485-12.webp)
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நகை திருட்டு
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் சந்து தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 56). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள கோவிலில் நடைபெற்ற கருட சேவை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 பவுன் தங்கநகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து லட்சுமி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.
கைது
பின்னர் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் 2 பேர் வந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரின் புகைப்படத்தை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட செங்குன்றம் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 45), கணேசன் (வயது 36) என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் வேறு எங்காவது வீட்டின் பூட்டை விட்டு இவர்கள் திருடினார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.