சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் நாளை முதல் குடிநீர் கொண்டு வரப்படும்; தமிழக அரசு


சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் நாளை முதல் குடிநீர் கொண்டு வரப்படும்; தமிழக அரசு
x
தினத்தந்தி 11 July 2019 6:52 AM GMT (Updated: 11 July 2019 6:52 AM GMT)

சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் நாளை முதல் குடிநீர் கொண்டு வரப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

சென்னை,

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் குடிநீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த மாதம் 21ந்தேதி ரூ.65 கோடி நிதியை ஒதுக்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.

சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து 50 வேகன்கள் கொண்ட சரக்கு ரெயில் நேற்று முன்தினம் காலை ஜோலார்பேட்டைக்கு வந்து சேர்ந்தது.

ஒவ்வொரு வேகனுக்கும் 2 பணியாளர் வீதம் நியமிக்கப்பட்டு மொத்தம் 100 பேர் தண்ணீரை ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் சோதனை ஓட்டமும் முடிந்தது.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் குடிநீர் பணிகள் தொடர்பாக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.  இதில் அமைச்சர் வேலுமணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பிற மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  இதன்பின் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னைக்கு நாளை முதல் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் என தெரிவித்து உள்ளது.

Next Story