வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரிக்கு போகாதது ஏன்? முதல்-அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரிக்கு போகாதது ஏன்? முதல்-அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 14 Aug 2019 12:15 AM GMT (Updated: 14 Aug 2019 12:15 AM GMT)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரிக்கு போகாதது ஏன் என்று முதல்-அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சென்னை,

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை மாவட்ட தலைவர் ஜெ.அன்பழகன் தலைமையில் அண்ணா அறிவாலயத்துக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

கேரள மாநிலம் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, அம்மாநில மக்கள் கடும் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, தி.மு.க. சார்பில் முடிந்த அளவிற்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். அந்த வேண்டுகோளை ஏற்று இன்று முதல் கட்டமாக, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கேரள மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக 400 மூட்டை அரிசி, 1,880 புடவைகள், 1,185 லுங்கிகள், 800 பெட்சீட்கள், 2,000 வாட்டர் பாட்டில்கள், 8 பெரிய பெட்டி அளவில் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் 38 டிபன் பாக்ஸ்கள் என ஏறக்குறைய 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அறிவாலயத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து இது போன்ற நிவாரணப் பொருட்கள் வர இருக்கிறது. கேரள மாநில தி.மு.க. நிர்வாகிகளை நான் சென்னைக்கு அழைத்ததின் பேரில் அவர்கள் இங்கு வந்து இருக்கிறார்கள். எனவே, நிவாரணப் பொருட்கள் அனைத்தையும் இன்றோ அல்லது நாளையோ ரெயில் மூலமாக அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. முன்னின்று செய்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்வியும், மு.க.ஸ்டாலின் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி: முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தமிழகத்துக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும், பூமிக்கு பாரமாக இருக்கிறார் என்றும் முதல்- அமைச்சர் கூறியிருக்கிறாரே?

பதில்:- நீலகிரிக்கு சென்று வந்த என்னைப் பற்றி சீன் காட்ட, விளம்பரத்திற்காகப் போனேன் என்று முதல்- அமைச்சர் கூறினார். அவர் அமெரிக்காவிற்கும், லண்டனுக்கும் செல்வதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. எனவே, அவர் அமெரிக்காவுக்கும், லண்டனுக்கும் சீன் காட்டத்தான் செல்கிறாரா? என்று சொல்வதற்கு எனக்கு ரொம்ப நேரம் ஆகாது.

ஆனால், அவரை போன்று பொறுப்பிழந்து, பதவி என்ற ஒன்றை மறந்து இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவதற்கு நான் நிச்சயமாக போகமாட்டேன். அதுமட்டுமல்ல, நேற்று(நேற்று முன்தினம்) அவர் கோவைக்கு வந்திருக்கிறார். அப்போது, அருகில் உள்ள ஊட்டிக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் அவர் போகவில்லை. இதற்கு எந்தவிதமான பதிலும் சொல்லவில்லை. முதலில் அவர் இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும். அதன்பிறகு, நான் பதில் சொல்கிறேன்.

இவ்வாறு அவர் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார். 

Next Story