தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 120 பேர் பலி


தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 120 பேர் பலி
x
தினத்தந்தி 18 Aug 2020 12:00 AM GMT (Updated: 17 Aug 2020 11:24 PM GMT)

தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஒரே நாளில் 120 பேர் உயிரிழந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 65 ஆயிரத்து 643 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,670 ஆண்கள், 2,220 பெண்கள் என மொத்தம் 5,890 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 9 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 11 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 224 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 940 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,185 பேரும், கோவையில் 393 பேரும், கடலூரில் 390 பேரும், குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 14 பேரும், நாகப்பட்டினத்தில் 10 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 36 லட்சத்து 47 ஆயிரத்து 582 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 945 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 508 ஆண்களும், 1 லட்சத்து 36 ஆயிரத்து 408 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 16 ஆயிரத்து 609 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 43 ஆயிரத்து 707 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 84 பேரும், தனியார் மருத்துவமனையில் 36 பேரும் என 120 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 24 பேரும், கோவையில் 10 பேரும், திருச்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டில் தலா 7 பேரும், நெல்லையில் 6 பேரும், கன்னியாகுமரி, வேலூரில் 5 பேரும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூரில் தலா 4 பேரும், திண்டுக்கல், காஞ்சீபுரம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசியில் தலா 3 பேரும், தஞ்சாவூர், சேலம், புதுக்கோட்டை, நாமக்கல், கரூரில் தலா இருவரும், கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, நீலகிரி, பெரம்பலூர், தேனி, திருவாரூர், திருப்பூர், விருதுநகரில் தலா ஒருவரும் என 31 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 5,886 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 886 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 660 பேரும், திருவள்ளூரில் 477 பேரும், செங்கல்பட்டில் 465 பேரும் அடங்குவர். இதுவரையில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 937 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 54 ஆயிரத்து 122 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 884 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 751 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 899 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 5 ஆயிரத்து 996 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தற்போது 62 அரசு நிறுவனங்களும், 74 தனியார் நிறுவனங்கள் என 136 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story