தமிழகத்தில் ஒரே நாளில் 73 ஆயிரம் பேருக்கு பரிசோதனை - புதிதாக 5,986 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் ஒரே நாளில் 73 ஆயிரம் பேருக்கு பரிசோதனை - புதிதாக 5,986 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Aug 2020 11:00 PM GMT (Updated: 20 Aug 2020 11:01 PM GMT)

தமிழகத்தில் நேற்று அதிக பட்சமாக ஒரே நாளில் 73,162 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 73 ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,629 ஆண்கள், 2,357 பெண்கள் என மொத்தம் 5,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த பட்டியலில், வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 18 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 230 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 825 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,177 பேரும், செங்கல்பட்டில் 462 பேரும், கோவையில் 397 பேரும், திருவள்ளூரில் 393 பேரும், குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 5 பேரும், தர்மபுரியில் 6 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 38 லட்சத்து 51 ஆயிரத்து 411 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 3 லட்சத்து 61 ஆயிரத்து 435 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 123 ஆண்களும், 1 லட்சத்து 43 ஆயிரத்து 283 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 29 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 17 ஆயிரத்து 256 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 46 ஆயிரத்து 55 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 72 பேரும், தனியார் மருத்துவமனையில் 44 பேரும் என 116 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் சென்னையில் 22 பேரும், கோவையில் 11 பேரும், சேலத்தில் 7 பேரும், திருவள்ளூர், கன்னியாகுமரியில் தலா 6 பேரும், கடலூர், திருப்பத்தூர், வேலூரில் தலா 5 பேரும், திண்டுக்கல், காஞ்சீபுரம், தென்காசியில் தலா 4 பேரும், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தேனி, திருவண்ணாமலை, நெல்லையில் தலா 3 பேரும், சிவகங்கை, திருவாரூர், தஞ்சாவூர், திருப்பூர், திருச்சியில் தலா 2 பேரும், அரியலூர், ஈரோடு, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தூத்துக்குடி, விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 31 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் 6,239 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 742 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,132 பேரும், செங்கல்பட்டில் 445 பேரும், திருவள்ளூரில் 404 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 3 லட்சத்து 1,913 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 53 ஆயிரத்து 283 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 886 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 760 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 928 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நேற்று புதிதாக 2 தனியார் மருத்துவமனை மற்றும் ஒரு அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 76 தனியார் மற்றும் 63 அரசு பரிசோதனை மையங்கள் என 139 பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story