முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு மருந்து வாங்க ரூ.25 கோடி மு.க.ஸ்டாலின் உத்தரவு


முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு மருந்து வாங்க ரூ.25 கோடி மு.க.ஸ்டாலின் உத்தரவு
x
தினத்தந்தி 7 Jun 2021 11:01 PM GMT (Updated: 7 Jun 2021 11:01 PM GMT)

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்து வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து, மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கிணங்க, 7-ந்தேதி (நேற்று) வரை ரூ.280.20 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறே, இதுவரை பெறப்பட்டுள்ள நிதியில் இருந்து, ‘ரெம்டெசிவிர்' போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜனை ரெயில் போக்குவரத்து மூலமாக கொண்டுவருவதற்கு தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும் முதல் கட்டமாக ரூ.50 கோடி வழங்க மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருந்தார்.

ரூ.25 கோடி ஒதுக்கீடு

2-வது கட்டமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாள்தோறும் 1.6 லட்சம் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டு வருவதை கருத்தில்கொண்டு, இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். உபகரணங்களை வாங்குவதற்கு ரூ.50 கோடி வழங்கவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து ‘சிப்காட்' நிறுவனம் மூலம் சிங்கப்பூர் மற்றும் பிற வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவ கருவிகளை வாங்குவதற்கு ரூ.41.40 கோடி முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டிருந்தார். தற்போது, கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ‘ஆம்போடெரிசின்' உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்குவதற்கு ரூ.25 கோடியை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story