மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய நீதிபதி தலைமையில் 9 பேர் குழு அமைப்பு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய நீதிபதி தலைமையில் 9 பேர் குழு அமைப்பு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2021 12:29 AM GMT (Updated: 11 Jun 2021 12:29 AM GMT)

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்து வருகிறது.

நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பு கொரோனா தொற்று காரணமாக இதுவரை வெளியாகவில்லை.

மு.க.ஸ்டாலின் உத்தரவு

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததும், நீட் தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் எந்த அளவில் இருக்கிறது?, மாணவர்கள் இந்த தேர்வால் என்ன விளைவுகளை சந்திக்கிறார்கள்? என்பது உள்பட பலவற்றை ஆராய்ந்து அறிக்கையாக சமர்ப்பிக்க, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உயர்நிலைக்குழு

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை சரிசெய்யும் வகையில், இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், அவற்றிற்கான சட்டவழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைகளை அளித்திட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக்குழு ஒன்று அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 9 பேர்

அந்த அறிவிப்பின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், உறுப்பினர்களாக டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், டாக்டர் ஜவஹர் நேசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர், சட்டத்துறை அரசு செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர், சிறப்பு பணி அலுவலர், மருத்துவக்கல்வி இயக்ககத்தின் இயக்குனர் ஆகியோரும், உறுப்பினர்-செயலர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனர், தேர்வுக்குழு செயலாளர் என 9 பேர் கொண்ட குழுவை அமைத்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழு உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனை பாதுகாத்திட தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்துக்குள் அரசுக்கு அளிக்கும். இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story