ரூ.1,036 கோடி செலவில் நடந்து வரும் கல்லணை சீரமைப்பு பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு


ரூ.1,036 கோடி செலவில் நடந்து வரும் கல்லணை சீரமைப்பு பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு
x
தினத்தந்தி 12 Jun 2021 12:07 AM GMT (Updated: 12 Jun 2021 12:07 AM GMT)

ரூ.1,036 கோடி செலவில் நடந்து வரும் கல்லணை சீரமைப்பு பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தஞ்சாவூர், திருச்சியில் நடந்து வரும் சிறப்பு தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் நீர்வளத்துறை சார்பில் நீர் வள அமைப்புகள் விரிவாக்கம், புதுப்பித்தல், புனரமைத்தல் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக ரூ.1,036 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நீர்வளத்துறை சார்பில் காவிரி-டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தூர்வாரும் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன வசதிக்காக திறந்துவிடப்படும் தண்ணீர் விரயமாகாமல் கடைமடை வரை தடையின்றி சென்று சேரும் வகையில், டெல்டா பாசன பகுதிகளில் நீர் நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து நிறைவேற்ற தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

கண்காணிப்பு அலுவலர்கள்

இதன்படி, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, நீர்வளத்துறையின் சார்பில், திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில், ரூ.65.10 கோடி திட்ட மதிப்பில் 4,061.44 கிலோ மீட்டர் தூரத்துக்கு 647 பணிகள் நடைபெற்று வருகின்றன. குறித்த காலத்தில், தரமான முறையில் பணிகளை முடிக்க ஏதுவாக, 9 மாவட்டங்களுக்கும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பணிகள் தொடர்பாக உழவர் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அந்த குழுக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு, வெளிப்படைத் தன்மையுடன் பணிகள் நடைபெறுவதை தெரிவிக்கும் வகையில் அனைத்து தகவல்களும் ஆவணப்படுத்தப்பட்டு அறிவிப்பு பலகைகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மு.க.ஸ்டாலின் கள ஆய்வு

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக விவசாயிகளுக்கு உதவும் வகையில் விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் ஆகியவை போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் மூலமாக டெல்டா மாவட்டங்களில் நீர்வளம் மேம்படும். இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட சாகுபடி இலக்கைத் தாண்டி உணவு உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யும் பொருட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டார்.

தூர்வாரும் பணிகள்

முதலாவதாக தஞ்சாவூர் வட்டம் வல்லம் வடக்கு கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் முதலை முத்துவாரி வடிகாலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும், பள்ளியக்ரஹாரம் கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் வெண்ணாற்றில் மண்திட்டுக்களை சமன்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் கொடியாலம் கிராமத்தில் ரூ.29.70 லட்சம் மதிப்பீட்டில் புலிவலம் மணற்போக்கி வடிகால் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வுகளின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல்காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச்செயலாளர் கே.கோபால், சிறப்பு தூர்வாரும் பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ், திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story