கந்துவட்டி கொடுமையால் தற்கொலை விவசாயி உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்


கந்துவட்டி கொடுமையால் தற்கொலை விவசாயி உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Jun 2021 10:56 PM GMT (Updated: 22 Jun 2021 10:56 PM GMT)

திருவண்ணாமலையில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி பிணத்துடன் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை சின்னபாலியப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 48), விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர், கடந்த 2018-ம் ஆண்டு கோட்டாங்கல் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கந்துவட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அவருக்கு ராமஜெயம் வட்டி பணமாக மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக அவரால் வட்டி கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும், வட்டிக்கு மேல் வட்டி சேர்ந்து கடன் தொகை அதிகரித்து விட்டதாக கூறி கடன் கொடுத்த நபர் ராமஜெயத்திடம் மிரட்டி அவரது வீட்டுடன் கூடிய 95 சென்ட் நிலத்தை எழுதி வாங்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடன் கொடுத்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பின்னர் அந்த நபர் கிரையம் செய்து கொண்ட நிலத்தின் பத்திரத்தை கொடுத்து விடுவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை 9 மணி வரை கடன் கொடுத்த நபர் சின்னபாலியப்பட்டு வந்து பத்திரத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த ராமஜெயத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது பிணத்தை செங்கம் பைபாஸ் சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story