8 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை: தமிழகத்தில் 5,755 பேருக்கு கொரோனா


8 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை: தமிழகத்தில் 5,755 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 Jun 2021 9:27 PM GMT (Updated: 25 Jun 2021 9:27 PM GMT)

தமிழகத்தில் நேற்று 8 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. ஒரே நாளில் 5,755 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 68 ஆயிரத்து 406 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3,297 ஆண்கள், 2,458 பெண்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 755 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 211 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 862 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 698 பேரும், ஈரோட்டில் 597 பேரும், சேலத்தில் 398 பேரும், சென்னையில் 350 பேரும், திருப்பூரில் 361 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 33 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

150 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 11 லட்சத்து 86 ஆயிரத்து 821 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 14 லட்சத்து 35 ஆயிரத்து 730 ஆண்களும், 10 லட்சத்து 19 ஆயிரத்து 564 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 24 லட்சத்து 55 ஆயிரத்து 332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 88 ஆயிரத்து 850 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 53 ஆயிரத்து 842 முதியவர் களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 95 பேரும், தனியார் மருத்துவமனையில் 55 பேரும் என 150 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 26 பேரும், வேலூரில் 16 பேரும், திருப்பூரில் 13 பேரும், சென்னையில் 11 பேரும், சேலத்தில் 9 பேரும் உள்பட நேற்று மட்டும் 29 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தென்காசி உள்பட 8 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

உயிரிழந்தவர்களில் 25 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 32 ஆயிரத்து 51 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

70,856 ஆயிரம் படுக்கைகள் காலி

தமிழகத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் 11 ஆயிரத்து 52 பேரும், ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகளில் 5 ஆயிரத்து 358 பேரும், ஐ.சி.யு. படுக்கைகளில் 4 ஆயிரத்து 602 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று 38 ஆயிரத்து 551 ஆக்சிஜன் படுக்கைகள், 26 ஆயிரத்து 811 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 5 ஆயிரத்து 494 ஐ.சி.யு படுக்கைகள் என மொத்தம் 70 ஆயிரத்து 856 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது. அதேபோல், கொரோனா பராமரிப்பு மையங்களில் 7 ஆயிரத்து 961 பேர் சிகிச்சையில் உள்ளனர். அந்தவகையில் 59 ஆயிரத்து 616 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.

8,132 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 8,132 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 1,199 பேரும், ஈரோட்டில் 865 பேரும், திருப்பூரில் 462 பேரும், சேலத்தில் 657 பேரும் அடங்குவர். இதுவரையில் 23 லட்சத்து 75 ஆயிரத்து 963 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 49 ஆயிரத்து 845 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story