சென்னையில் மின்சார ரெயில் போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது கூட்டம் அலைமோதியது


சென்னையில் மின்சார ரெயில் போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 25 Jun 2021 9:38 PM GMT (Updated: 25 Jun 2021 9:38 PM GMT)

சென்னையில் 98 சதவீதம் இயக்கப்பட்டு, மீண்டும் மின்சார ரெயில் போக்குவரத்து பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று முதல் அலை தீவிரமடைந்ததால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் அத்தியாவசிய பணியாளர்களின் வசதிக்காக மட்டும், சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து நிலைமை சீரான பிறகு பஸ், ரெயில் போக்குவரத்துகள் தொடங்கப்பட்டது.

சென்னையில் 640-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மின்சார ரெயில் சேவை முழுமையாக இயக்கப்பட்டு, பொதுமக்களுக்கும் ரெயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு பிப்ரவரி மாதத்தில் தாம்பரம்-செங்கல்பட்டு 3-வது வழித்தடப்பணிகள் நடைபெற்றதால், மின்சார ரெயில் சேவை எண்ணிக்கை அவ்வப்போது குறைக்கப்பட்டு வந்தது.

எண்ணிக்கை அதிகரிப்பு

பிப்ரவரி மாதம் 20-ந் தேதி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 438 என்ற எண்ணிக்கையில் குறைந்தது. அதன்பிறகு மார்ச் மாதம் 5-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்தது. இதையடுத்து கொரோனா 2-வது அலை தீவிரமடைய தொடங்கியதால், மீண்டும் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால் மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கையும் குறைப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அத்தியாவசி பணியாளர்களுக்கு மட்டும் ரெயிலில் அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில் 2-வது அலை பாதிப்பு சற்று தனிய தொடங்கி உள்ளதால், மீண்டும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

98 சதவீதம் இயக்கம்

அந்தவகையில் நேற்று முதல் சென்னையில் 630 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி 98 சதவீதம் ரெயில்கள் இயக்கப்பட்டு விட்டன. இதில் பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், பொது துறை நிறுவன ஊழியர்கள், ஐகோர்ட்டு மற்றும் மற்ற கோர்ட்டு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் பெண் பயணிகள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்றும், ஆண் பயணிகள் கூட்ட நெரிசல் அதிகம் இல்லாத சாதாரண நேரத்தில் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டதால் நேற்று கடற்கரை, மூர்மார்க்கெட், எழும்பூர், நுங்கம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

10 நிமிடத்துக்கு ஒரு சேவை

5 மாதத்திற்கு பிறகு மின்சார ரெயில் சேவை முழு அளவில் தொடங்கி உள்ள நிலையில், அதில் பெண்கள், குழந்தைகளுடன் உற்சாகமாக பயணம் செய்தனர். 10 நிமிடத்திற்கு ஒரு சேவை தொடர்ந்து நேற்று இயக்கப்பட்டு வந்தது. ஆனாலும், ரெயிலில் பயணம் செய்யும் போது சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

பஸ் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டதால், பஸ்சில் கூட்ட நெரிசலில் செல்லும் போது தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. தற்போது அரசு மின்சார ரெயில் சேவையை அதிகரித்து, பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கியிருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் பணிக்கு செல்வோருக்கு எந்த வித போக்குவரத்து தடையும் இல்லாமல் இருக்கிறது. தொடர்ந்து மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story