நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Jun 2021 9:40 PM GMT (Updated: 25 Jun 2021 9:40 PM GMT)

நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

கொரோனா பெருந்தொற்றில் இருந்து கட்டுமானத் தொழிலாளர்களைப் பாதுகாத்திடும் சீரிய நோக்கத்தோடு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற 13 லட்சத்து 41 ஆயிரத்து 494 தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

முதற்கட்டமாக 2 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம் மூலமாக தடுப்பூசி செலுத்தும் பணியினையும், கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் பணிவாய்ப்பை இழந்த, குடும்ப அட்டை இல்லாத, புலம் பெயர்ந்த வெளி மாநிலத் தொழிலாளர்கள் பசியால் வாடக்கூடாது என்ற உயரிய எண்ணத்தோடு, 1 லட்சத்து 29 ஆயிரத்து 444 தொழிலாளர்களுக்கு ரூ.6 கோடியே 66 லட்சத்து 44 ஆயிரத்து 243 மதிப்பீட்டில், 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு மற்றும் 1 கிலோ சமையல் எண்ணெய் ஆகிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கும் திட்டத்தையும் நேற்று சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், எம்.பி.க்கள் எம்.சண்முகம், தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் கிர்லோஷ் குமார், தொழிலாளர் துறை ஆணையர் வள்ளலார், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செந்தில்குமார், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story