தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் தகவல்


தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 24 July 2021 7:57 AM GMT (Updated: 24 July 2021 7:57 AM GMT)

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மன்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று மற்றும் நாளை தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், தெற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் வரும் 26 ஆம் தேதி வரை, பலத்த காற்று மணிக்கு சுமார் 40-50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Next Story