அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியை கைவிடவேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியை கைவிடவேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Nov 2021 11:07 PM GMT (Updated: 30 Nov 2021 11:07 PM GMT)

2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியை கைவிடவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தை கேலி பேசிய அப்போதைய தி.மு.க. தலைவர் 1989-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஆன உடன் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்தினார்.

அதுபோலவே பல திட்டங்களை மறைந்த தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சரான பிறகும் தொடர்ந்து செயல்படுத்தினார். ஆனால் இந்த தி.மு.க. அரசு அ.தி.மு.க. அரசு செயல்படுத்திய பல மக்கள் நலத்திட்டங்களுக்கு மூடு விழா நடத்தி வருகிறது.

கண்டனம்

விழுப்புரம் அம்மா பல்கலைக்கழகம், அம்மா உணவகம், தாலிக்கு தங்கம் (புதிய விதிமுறைகளை புகுத்துதல்), அம்மா இருசக்கர வாகன திட்டத்தை கைவிடுதல், அம்மா குடிநீர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். தற்போது அம்மா மினி கிளினிக்கை மூடும் விதமாக அங்கு பணிபுரியும் சுமார் 1,820 டாக்டர்களையும், 1,420 மருத்துவ பணியாளர்களையும் வருகிற 4-ந்தேதி முதல் பணிநீக்கம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த, மக்களால் மிகுந்த வரவேற்பை பெற்ற சிறந்த திட்டத்தை அரசு நிறுத்த நினைப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

மூடும் முயற்சியை கைவிடவேண்டும்

கொரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள காலத்திலும், தங்களது உடல்நிலையை கருத்தில்கொள்ளாமல், உண்மையான டாக்டர்கள் என்ற முனைப்போடு பணியாற்றி, கொரோனா நோய்த்தொற்றை தற்போது 3 இலக்க எண்ணிக்கையில் கட்டுக்குள் கொண்டு வந்த அம்மா மினி கிளினிக் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தி.மு.க. அரசு பணிநீக்கம் செய்ய உள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியை கைவிட்டுவிட்டு அம்மா மினி கிளினிக்குகளில் பணிபுரியும் அனைத்து டாக்டர்களையும், மருத்துவ பணியாளர்களையும் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story