காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 April 2022 3:06 AM GMT (Updated: 11 April 2022 3:06 AM GMT)

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

காரக்கால், 

தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக-வட இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையால் சில இடங்களில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) முதல் 14-ந் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி, இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரையில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 14-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கனவே நாகை மாவட்டத்தில் 1 - 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story