பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 242 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.3¾ லட்சம் அபராதம் - சென்னை மாநகராட்சி தகவல்


பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 242 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.3¾ லட்சம் அபராதம் - சென்னை மாநகராட்சி தகவல்
x

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத்தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அவ்வாறு தெருக்களில் சுற்றித்திரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ.1,550 விதிக்கப்படுகிறது.

அதன்படி, மாடுகள் பிடிக்கப்பட்ட பின்னர், அதனை மாட்டுத்தொழுவத்தில் இருந்து விடுவித்து எடுத்து செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாண பத்திரத்தில் மாடுகளை விடுவிக்க மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று சமர்ப்பித்து தங்களுடைய மாடுகளை விடுவித்து கொள்ள வேண்டும்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில் கடந்த 7-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மொத்தம் 242 மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 வீதம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story