18 சாலைகளை பராமரிக்க 270 தூய்மை பணியாளர்கள்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை


18 சாலைகளை பராமரிக்க 270 தூய்மை பணியாளர்கள்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை
x

18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க 270 தூய்மை பணியாளர்கள் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தூய்மைப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் பொது இடங்களில் திடக்கழிவுகளை கொட்டுவது அல்லது தூக்கி எறிவதை தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் மாநகராட்சி சார்பில் குப்பையில்லா பகுதிகள் என்ற திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக 18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிய வகை குப்பைத்தொட்டிகள் அமைத்தல், சிறிய குப்பைத்தொட்டியுடன் கூடிய மிதி வண்டிகளில் தூய்மைப்பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை ரோந்து பணியில் ஈடுபடுதல், சாலைகளில் குப்பைகளை கொட்டும் நபர்களின் மீது அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த 66 கி.மீ. நீளமுடைய 18 சாலைகளில், 196 பஸ் நிறுத்தங்கள் குப்பையில்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க 270 தூய்மை பணியாளர்கள் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தூய்மைப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் குப்பையில்லா பகுதிகள் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் சாலைகளில் குப்பைகளை கொட்டிய தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அபராதமாக ரூ.39 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story