புயல் பாதிப்பு.. 4 நாட்களில் 28,563 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி தகவல்


புயல் பாதிப்பு.. 4 நாட்களில்  28,563 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி தகவல்
x
தினத்தந்தி 10 Dec 2023 7:52 PM GMT (Updated: 11 Dec 2023 2:25 AM GMT)

வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டனர்.

சென்னை,

வங்கக்கடலில் உருவான `மிக்ஜம்' புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னை மாநகர் மற்றும் புறநகரில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. வேளச்சேரி, முடிச்சூர், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, முகலிவாக்கம், கொரட்டூர், போரூர், வளசரவாக்கம், ஆலப்பாக்கம், மாதவரம், மாத்தூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, மணலி, துரைப்பாக்கம், தரமணி, பெருங்குடி, கொடுங்கையூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியது.

இப்பகுதிகளில் வெள்ளம் விரைவாக வடியாததால் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். சென்னையில் காலையில் 23 ஆயிரம் பேரும், இரவில் 19 ஆயிரம் பேரும் வெள்ள பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பள்ளிக்கரணை, முடிச்சூர், பெரும்பாக்கம், தரமணி, வேளச்சேரி உள்பட தாழ்வான பகுதிகளில் கூடுதல் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் 7-வது நாளான நேற்று சென்னையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிந்தது. புறநகர் பகுதிகளில் மட்டுமே தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை முழுவதும் டிசம்பர் 6ம் தேதியில் இருந்து டிசம்பர் 9ம் தேதி வரை 28,563 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story