சேலம் தனியார் பள்ளியில் படிக்கும் 29 மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் - போலீஸ் விசாரணை


சேலம் தனியார் பள்ளியில் படிக்கும் 29 மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் - போலீஸ் விசாரணை
x

தனியார் பள்ளியில் படிக்கும் 29 மாணவ, மாணவிகளுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் அதே பள்ளியில் உள்ள கேண்டீனில் பப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் சிறிது நேரத்தில் 29 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் அந்த மாணவர்களை உடனடியாக அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த மாணவர்கள் நலமாக உள்ளனர். அவர்கள் தங்கள் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து ஓமலூர் தாசில்தார், டி.எஸ்.பி. சங்கீதா மற்றும் வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து கேண்டீனில் விநியோகம் செய்யப்பட்ட உணவு மாதிரிகளை உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story