காஞ்சீபுரத்தில் வாலிபர் குத்திக்கொலை - 3 பேர் கைது


காஞ்சீபுரத்தில் வாலிபர் குத்திக்கொலை - 3 பேர் கைது
x

காஞ்சீபுரத்தில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபால் பூபதி தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி அமுதா. இவர்களது மகள் சவுமியா. மகன் சரண்சிங் (வயது 26). காஞ்சீபுரம் கீரை மண்டபம் அருகே சரண்சிங் பச்சை குத்துதல் தொழில் (டாட்டூஸ்) கடை நடத்தி வந்தார். மேலும் வணிகர் வீதி பகுதியில் அசைவ உணவகம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

இவரது குடும்பத்தினருக்கும் இவரது வீட்டுக்கு அருகே உள்ள விஷ்ணு (23) என்பவரது குடும்பத்தினருக்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் விஷ்ணு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அறிவழகன் மற்றும் அமுதாவை தாக்கி உள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து தனது வீட்டுக்கு வந்த சரண்சிங் விஷ்ணுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் ஆவேசமடைந்த விஷ்ணு, அவரது தாயார் சித்ரா(44), தம்பி சிவா(21) மற்றும் 3 நண்பர்கள் சரண்சிங் குடும்பத்தினரை கடுமையாக தாக்கினர்.

மேலும் கத்தரிக்கோல் மற்றும் ஸ்குரூடிரைவர் போன்றவற்றை கொண்டு சரண் சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினரை குத்தினர். அதில் படுகாயமடைந்த சரண்சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்சிங் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்து சிவகாஞ்சி போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விஷ்ணு கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்பதும், வேண்டும் என்றே முன்விரோதம் காரணமாக தனது நண்பர்களுடன் கஞ்சா புகைத்து சரண் சிங்கை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் 3 நாட்களுக்கு முன்பு விஷ்ணு வீட்டில் வளர்ப்பு நாய் அதிகமாக சரண்சிங் வீட்டருகே சத்தமிட்டதாலும், விஷ்ணுவின் பாட்டி பாக்கு இடிக்கும் சிறிய உரலில் பாக்கு இடிக்கும் போது ஏற்பட்ட சத்தங்களை தொடர்ந்து சரண்சிங்கிடம் வளர்ப்பு நாயை வேறு இடத்தில் கட்டி வைக்க வேண்டியதுதானே என்றும் ஏன் தேவையில்லாமல் எங்களுக்கு இடைஞ்சல் செய்கிறீர்கள் என விஷ்ணுவிடம் கேட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தான் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் நேரில் விசாரணை செய்து விஷ்ணு, அவருடைய தாயார் சித்ரா, தம்பி சிவா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story