நகை கடை பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 3 பேர் கைது


நகை கடை பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 3 பேர் கைது
x

ஸ்ரீபெரும்புதூர் அருகே நகை கடையின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவந்தாங்கல் பாஞ்சாலப்பட்டு பகுதியில் வசிப்பவர் பிரவீன். இவர் அதே பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். கடந்த 18-ந் தேதி நள்ளிரவில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவந்தாங்கல் மற்றும் பாஞ்சாலப்பட்டு பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பிரவீனின் நகை கடையில் இருந்து மர்ம நபர்கள் சிலர் இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர்.நகை கடையின் உரிமையாளர் பிரவீனை வரவழைத்து கடைக்குள் சென்று பார்த்தபோது ஒரு கிலோ வெள்ளி திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். சென்னை எழில் நகரை சேர்ந்த பரூக் ஷேக் (வயது 24), கே.கே.நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற கொட்டா கார்த்திக் (28) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

மேலும் ஒருவர் தப்பிச்சென்று விட்டார். இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது தாங்கள் திருடிய வெள்ளி பொருட்களை போரூரில் உள்ள வாஷிமிடம் விற்றதாக கூறியுள்ளனர். அதை தொடர்ந்து போரூர் சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வாஷிமிடம் இருந்து உருக்கிய நிலையில் ஒரு கிலோ வெள்ளியை கைப்பற்றினர். அதனை தொடர்ந்து பரூக் ஷேக், கார்த்திக், வாஷிம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story