இலங்கையில் விலை உயர்வால் உயிர் வாழ முடியாது; நகையை விற்று 3 பேர் அகதிகளாக வருகை..!


இலங்கையில் விலை உயர்வால் உயிர் வாழ முடியாது; நகையை விற்று 3 பேர் அகதிகளாக வருகை..!
x

இலங்கையில் அனைத்து பொருட்கள் விலை உயர்வால் உயிர் வாழ முடியாததால் நகையை விற்று அதில் கிடைத்த பணம் மூலம் 3 பேர் ராமேஸ்வரம் வந்தனர்.

ராமேஸ்வரம்:

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரிசி, சீனி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்து விட்டது. அதுபோல் இதுவரையிலும் இலங்கையிலிருந்து படகு மூலம் 80 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை பேசாலை பகுதியில் இருந்து ஒரு பிளாஸ்டிக் படகு மூலம் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 3 பேரும் பிளாஸ்டிக் படகு மூலம் புறப்பட்டு நேற்று நள்ளிரவு தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் கடற்கரையில் வந்து இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து இன்று அதிகாலை தகவல் கிடைத்ததும் கடலோர போலீசார் மற்றும் க்யூ பிரிவு போலீசார் விரைந்து சென்று அந்த மூன்று பேரையும் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

விசாரணையில் இவர்கள் இலங்கை டெமக்கோட்டை பகுதியை சேர்ந்த ஜெசிந்தா மேரி (வயது 51), இவரது மகன் பிரவீன் சஞ்சய் (10) மற்றும் மன்னார் மாவட்டம் கொக்கு படையான் பகுதியை சேர்ந்த அனிஸ்டன் (31) என தெரியவந்தது. மேலும் ஜெசிந்தா மேரி ஏற்கனவே பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் தங்கி இருந்தவர். கடந்த பிப்ரவரி மாதம் தான் மகனுடன் விமானம் மூலம் இலங்கை சென்றுள்ளார்.

தற்போது அங்கு ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டதால் அங்கு மகனுடன் வாழ முடியாமல் தான் வைத்திருந்த தங்க நகையை விற்று அதில் கிடைத்த ஒன்றரை லட்சம் பணத்தை படகோட்டிக்கு கொடுத்து தமிழகம் தப்பி வந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் அனிஸ்டனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தனது மனைவி மூன்று மாதத்திற்கு முன்பே படகு மூலம் தமிழகம் வந்து விட்டதால் மனைவி மற்றும் குழந்தையுடன் சேர்ந்து வாழ்வதற்காகவே இங்கு வந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று வந்த மூன்று அகதிகளுடன் சேர்த்து இதுவரையிலும் இலங்கையிலிருந்து மொத்தம் 83 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story