கார், மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்திய 4 பேர் கைது


கார், மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்திய 4 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2023 7:00 PM GMT (Updated: 10 July 2023 9:24 AM GMT)

பேரளம் அருகே கார், மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

காரில் மதுபாட்டில் கடத்தல்

திருவாரூர் மாவட்டம் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பில்லூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் அட்டை பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து காரில் பயணம் செய்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சியை சேர்ந்த கணேசன் (வயது36), மாரிசாமி (26) ஆகியோர் என்பதும், காரைக்காலில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து மதுபாட்டில்கள் மற்றும் அவற்றை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.

மோட்டார் சைக்கிள்

அதேபோன்று கொல்லுமாங்குடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 பெட்டிகளில் மது பாட்டில்கள், காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் திருக்கோடிக்காவல் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (22), லெனின் (21) ஆகியோர் என்ப்தும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.


Next Story