குழந்தைகள் உள்பட5 பேர் உடல் கருகி சாவு


குழந்தைகள் உள்பட5 பேர் உடல் கருகி சாவு
x

கடலூரில் குடும்ப தகராறு காரணமாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் ஒருவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் செல்லங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் பிரகாஷ். கொத்தனார். இவரது மனைவி தமிழரசி (வயது 30). இவர்களுக்கு தியாசாய்(4) என்ற மகனும், ஹாசினி என்ற 4 மாத பெண் குழந்தையும் இருந்தனர். தமிழரசியின் தங்கை தனலட்சுமி(24). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணியாற்றி வந்தார். அப்போது தன்னுடன் அதே ஆஸ்பத்திரியில் தொழிநுட்ப ஊழியராக பணியாற்றிய சிதம்பரத்தை சேர்ந்த சற்குரு(32) என்பவரை காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லக்ஷன் என்ற 8 மாத ஆண் குழந்தை இருந்தது.

குடும்ப பிரச்சினை

இந்த நிலையில் தனலட்சுமிக்கும், சற்குருவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று பிரகாஷ், கொத்தனார் வேலைக்கு சென்று விட்டார். எல்.கே.ஜி. படிக்கும் தியாசாய், கடலூர் முதுநகரில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டான்.

வாக்குவாதம்

இதற்கிடையே தனலட்சுமி தனது தாய் செல்வி (50) மற்றும் குழந்தை லக்ஷனுடன் நேற்று காலை செல்லங்குப்பத்தில் உள்ள தமிழரசியின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து பெட்ரோல் கேனுடன், சற்குருவும் தமிழரசியின் வீட்டுக்கு வந்துள்ளார்.

அங்கு குடும்ப பிரச்சினை தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சற்குரு, வீட்டை உள்பக்கமாக பூட்டியுள்ளார்.

பின்னர் தான் கொண்டு வந்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை தனலட்சுமி, தமிழரசி, செல்வி மற்றும் 2 குழந்தைகள் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தன் மீதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்ததாக தெரிகிறது.

இதில் அனைவரது உடலிலும் பற்றி எரிந்த தீயால், வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டனர். மேலும் உடல் முழுவதும் எரிந்த தீயுடன் வீட்டுக்குள் அங்கும் இங்குமாக ஓடியுள்ளனர். இதில் தமிழரசி, அவரது குழந்தை ஹாசினி, சற்குருவின் மகன் லக்ஷன் ஆகிய 3 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தீவிர சிகிச்சை

மேலும் பலத்த காயம் அடைந்த தனலட்சுமி, செல்வி, சற்குரு ஆகியோர் கதவை திறந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இந்த சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்து தீக்காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனலட்சுமி உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சற்குரு, தனலட்சுமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செல்வி, மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பிரகாஷ் விரைந்து வந்து, பலியான தனது மனைவி தமிழரசி மற்றும் குழந்தை ஹாசினியின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இந்த சம்பவம் பற்றி அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரணம் என்ன?

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்த போது, சற்குரு பெட்ரோல் கேனுடன் பிரகாசின் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் தன்மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்த போது, மற்றவர்கள் மீதும் தீ பற்றியதால் இந்த விபரீதம் நிகழ்ந்ததா? அல்லது திட்டமிட்டு கொலை செய்ய வேண்டும் என்கிற நோக்கில் சற்குரு இந்த கொடூர செயலில் ஈடுபட்டாரா? என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அதன் முடிவிலே உண்மை நிலை தெரியவரும் என்று தொிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story