போரூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.61 லட்சம் மோசடி - வாலிபர் கைது


போரூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.61 லட்சம் மோசடி - வாலிபர் கைது
x

போரூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி 30-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.61 லட்சத்து 19 ஆயிரம் வரை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அலமேலு (வயது 46). இவர், மவுலிவாக்கம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்தி என்ற கார்த்திகேயன் (31) என்பவரிடம் 2019-ம் ஆண்டு முதல் ஏலச்சீட்டு கட்டி வந்தார். தனது உறவினர்களையும் அதில் சேர்த்துள்ளார்.

இந்தநிலையில் 2020-ம் ஆண்டு ஏலச்சீட்டு முடிந்தும், சீட்டு கட்டியவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கார்த்திகேயன் தராமல் ஏமாற்றி வந்தார். கார்த்திகேயனிடம் அலமேலு பலமுறை பணத்தை கேட்டும் தராததால் இது குறித்து ஆவடியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் கந்தவேல் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அதில் கார்த்திகேயன், ஏலச்சீட்டு நடத்தி 30-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.61 லட்சத்து 19 ஆயிரம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலன் நேற்று காலை கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்தார்.


Next Story