ஒரு மாதத்தில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 659 மில்லியன் கனஅடி நீர்வரத்து


ஒரு மாதத்தில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 659 மில்லியன் கனஅடி நீர்வரத்து
x

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஒரு மாதத்தில் கிருஷ்ணாநீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு 659 மில்லியன் கனஅடி நீர் வந்துள்ளது.

திருவள்ளூர்

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

கிருஷ்ணாநதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். அதன்படி கடந்த மே மாதம் 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கனஅடி வீதம் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் மே 4-ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது.

தற்போது கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 450 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் நேற்று பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 300 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது.

கடந்த மே மாதம் 1-ந் தேதியிலிருந்து நேற்று காலை வரை பூண்டி ஏரிக்கு 659 மில்லியன் கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை நீர்மட்டம் 27.70 அடியாக பதிவாகியது. 1.270 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


Next Story