காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 70 குடும்பத்தினர் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு


காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு:  70 குடும்பத்தினர் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு
x

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதை தொடர்ந்து குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் 70 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதை தொடர்ந்து குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் 70 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து அணை நீர்மட்டம் 120 அடியை எட்டி நிரம்பியதால அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரம் பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் பொதுமக்கள் காவிரி கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் நீரில் குளிப்பதோ, துணி துவைப்பதோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்படி குமாரபாளையம் காவிரி கரையோரம் உள்ள கிராமங்களில் தாழ்வான பகுதியில் காவிரி வெள்ளம் புகுந்ததால், அப்பகுதியில் வசித்து வரும் நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

70 குடும்பத்தினர் தங்கவைப்பு

குமாரபாளையம் அக்ரஹாரம் கலைமகள் வீதியில் தாழ்வான பகுதியில் காவிரி வெள்ள நீர் சூழ்ந்துள்ள 27 குடும்பங்களை சேர்ந்த 59 நபர்கள் சி.ஐ.எஸ். நடுநிலைப்பள்ளி முகாமிலும், மணிமேகலை தெருவில் தாழ்வான பகுதியில் வசித்து வந்த 8 குடும்பங்களை சேர்ந்த 25 நபர்கள் அருகில் உள்ள புத்தர் தெரு நகராட்சி தொடக்க பள்ளியிலும் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிராமத்தில் தாழ்வான பகுதியான காவிரி நதி ஓடத்தெரு என்கிற பகுதியை சேர்ந்த 31 குடும்பங்களை சேர்ந்த 82 நபர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்திலும், மற்றொரு தாழ்வான பகுதியான நாட்டாகவுண்டம்புதூர் என்ற பகுதியில் வசித்து வரும் 4 குடும்பங்களை சேர்ந்த 14 நபர்கள் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70 குடும்பங்களை சேர்ந்த 180 நபர்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன. இந்த முகாம்களில் தங்கியுள்ள நபர்களுக்கு மருத்துவக்குழுவினர் வெப்பநிலை பரிசோதனை செய்து கண்காணித்து வருகின்றனர்.

வருவாய் அலுவலர் ஆய்வு

மேலும் குமாரபாளையம் தாலுகாவில் கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ளபாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து வருவாய்த்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிகளில் காவிரி கரையோர பகுதிகள் மற்றும் வெள்ள நிவாரண முகாம்களில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் குறித்து கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story