கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலைய கட்டுமான பணி 95 சதவீதம் நிறைவு - அமைச்சர் முத்துசாமி பேட்டி


கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலைய கட்டுமான பணி 95 சதவீதம் நிறைவு - அமைச்சர் முத்துசாமி பேட்டி
x

கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலைய கட்டுமான பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

செங்கல்பட்டு

சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் சென்னை-திருச்சி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது பயணத்தை சிரமமின்றி இனிதாக மேற்கொள்வதற்காக 2019-ம் ஆண்டு கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில் 44.74 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் செலவில் புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கி 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் 2 அடித்தளம், மற்றும் தரைத்தளம், முதல் தளம் கொண்ட கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் 95 சதவீத பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. மீதி உள்ள 5 சதவீத பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகைக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் எளிதாக வந்து செல்வதற்காக கிளம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைய இருக்கிறது. அந்த ரெயில் நிலையத்திலிருந்து நேராக கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வருவதற்கும், பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு பொதுமக்கள் சிரமமின்றி எளிதாக செல்வதற்காக உயர் மட்ட மேம்பாலமும் அமைக்கப்படுகிறது. மேலும் கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரெயில் நிலையமும் வருகிறது.

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் தேவைக்கு ஏற்ப விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்வதற்காக மேலும் 6 ஏக்கர் நிலப்பரப்பில் வணிக வளாகம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பஸ் நிலையத்தில் உணவகங்கள் உள்பட 100 கடைகள் கட்டப்பட்டுள்ளன. 2,700-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், 200-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் பாதிப்புகள் ஏற்படாதவாறு திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பரனூர் சுங்கச்சாவடி அருகே 2 ஏக்கர் 58 சென்ட் பரப்பளவில் ரூ. 25 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 971 மதிப்பீட்டில் மொத்தம் 116 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் பேசியதாவது:-

இந்த கட்டிடம் 80 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற மார்ச் மாத இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மக்கள் மத்தியில் சென்றடைந்தால் இந்த கட்டிடத்தின் அருகே உள்ள 13.73 ஏக்கர் பரப்பளவில் காலிமனைகளையும் 145 அறைகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி 121 குடியிருப்புகளில் 61 குடியிருப்புகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து மறு சீரமைக்கவேண்டிய நிலையில் உள்ளது.

இவ்வாறு இவர் கூறினார்.

பின்னர் அங்கு மரக்கன்றுகளை அமைச்சர் நட்டு வைத்தார்.

அப்போது அவருடன் செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், சென்னை பெருநகர வளர்ச்சி குழும கண்காணிப்பு பொறியாளர் சீனிவாச ராவ், செயற்பொறியாளர்கள் ராஜன்பாபு, பாலமுருகன், வருவாய் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சஞ்சீவனா, ஒன்றியகுழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், புலிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அசோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story