புதுக்கோட்டை: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாலிபருக்கு 7 ஆண்டு சிறை


புதுக்கோட்டை: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 14 Oct 2022 1:52 PM GMT (Updated: 14 Oct 2022 4:22 PM GMT)

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ராயவரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). இவர் 10 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். இது தொடர்பாக சிறுமியின் தரப்பில் அவரது தாய் கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 28-ந் தேதி அரிமளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி சத்யா தீர்ப்பு வழங்கினார்.

வழக்கில் சுரேஷ்க்கு போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமி தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர் என்பதால் அச்சட்டத்தின் கீழ் 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் 2 வாரங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க அவர் உத்தரவிட்டார். அதன்படி அவர் 7 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிப்பவார். இதைத்தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட சுரேசை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.


Next Story