வேளச்சேரியில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்


வேளச்சேரியில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்
x

வேளச்சேரியில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது.

சென்னை

திருச்சியை சேர்ந்தவர் பிரசன்ன வெங்கடேஷ். இவர், தன்னுடைய தந்தை பாலாஜி, உறவினர் ஆனந்த், காமாட்சி ஆகியோருடன் சென்னையில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு திருச்சி செல்வதற்காக வேளச்சேரி மெயின் ரோடு வழியாக காரில் சென்று கொண்டு இருந்தார். காரை பிரசன்ன வெங்கடேஷ் ஓட்டினார்.

வேளச்சேரி காந்தி சாலை அருகே உள்ள ஐ.ஐ.டி.கேட் அருகில் வந்தபோது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த பிரசன்ன வெங்கடேஷ் காரை சாலையோரம் நிறுத்தினார். உடனடியாக காரில் இருந்த 4 பேரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் கார் முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. அந்த சாலையில் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இதனால் வேளச்சேரி பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்துவந்த வேளச்சேரி தீயணைப்பு வீரர்கள், காரில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story