பொதட்டூர்பேட்டையில் குளியல் அறையில் வழுக்கி விழுந்த கல்லூரி மாணவர் சாவு


பொதட்டூர்பேட்டையில் குளியல் அறையில் வழுக்கி விழுந்த கல்லூரி மாணவர் சாவு
x

பொதட்டூர்பேட்டையில் கல்லூரி மாணவர் குளியல் அறையில் வழுக்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா, வளர்புரம் கிராமத்தை சோ்ந்தவர் நடராஜன் (வயது 47). இவரது மனைவி ஜெயந்தி (40). இவர்களுக்கு மகேஷ் (20), கேசவன் (18) என 2 மகன்கள் இருந்தனர். மூத்த மகன் மகேஷ் பேர்ணாம்பட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இளைய மகன் கேசவன் சென்னையில் உள்ள கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா, பொதட்டூர்பேட்டையில் வசித்து வந்த ஜேயந்தியின் தந்தை பென்னுசாமி இறந்து விட்டார். இதனால் ஜெயந்தி தனது இரு மகன்களுடன் தந்தை வீட்டில் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் குளியல் அறைக்கு சென்ற மூத்த மகன் மகேஷ் அங்கு வழுக்கி விழுந்து தலையில் பலமாக அடிபட்டது. நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் வீட்டார் கதவை உடைத்து பார்த்தபோது மகேஷ் அங்கே மயங்கி கிடந்தது தெரியவந்தது. அவரை மீட்டு உறவினர்கள் சிகிச்சைக்காக பொதட்டூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவன் மகேஷின் தந்தை நடராஜன் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story