மாங்காட்டில் அபாயகரமான பொருட்களை மறுசுழற்சி செய்த கம்பெனிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்


மாங்காட்டில் அபாயகரமான பொருட்களை மறுசுழற்சி செய்த கம்பெனிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
x

மாங்காட்டில் அபாயகரமான பொருட்களை மறு சுழற்சி செய்த கம்பெனிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம்

மாங்காடு நகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து அடிக்கடி நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் தனியார் பிளாஸ்டிக் நிறுவனம் இயங்கி வருவதாக வந்த தகவலையடுத்து மாங்காடு நகராட்சி கமிஷனர் சுமா தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உரிய அனுமதியின்றி அபாயகரமான பொருட்களை மறு சுழற்சி செய்து வந்த நிறுவனம் கண்டறியப்பட்டது. அங்கு சோதனை செய்தபோது அனுமதியில்லாமல் பிளாஸ்டிக் மூல பொருட்களை கொண்டு உற்பத்தி செய்வதும் காற்று மாசுபடும் வகையில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து அபாயகரமான முறையில் மறு சுழற்சி செய்து வந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் அந்த நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உடனடியாக உரிய உரிமம் பெற வேண்டும் அது மட்டுமின்றி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள தனியார் நிறுவனத்தை அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி விட்டு சென்றனர்.

மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக சோதனை செய்து பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story