முன்விரோதத்தில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு


முன்விரோதத்தில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு
x

திருவாலங்காடு அருகே முன்விரோதத்தில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி பலியானார்.

திருவள்ளூர்

திருவாலங்காடு அடுத்த ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது ரங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் (50) என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 15-ந் தேதி பெருமாள் வழக்கம்போல கால்நடைகளை அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு கூட்டி சென்றார். அந்த இடத்திற்கு செல்வமும் வந்தார். அப்போது இருவருக்கும் இடையே முன்விரோதத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வம் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து பெருமாளை சரமாரியாக தாக்கினார்.

இதில் பெருமாள் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உறவினர்கள் பெருமளை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்தவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பெருமாளின் அண்ணன் மாசிலாமணி அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story