நிலத்தகராறில் ஈடுபட்டவர் வீட்டின் முன் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை


நிலத்தகராறில் ஈடுபட்டவர் வீட்டின் முன் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
x

திருத்தணி அருகே நிலத்தகராறில் ஈடுபட்டவர் வீட்டின் முன் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருத்தணி ஒன்றியம், சூர்யநகரம் ஊராட்சி பொம்மராஜூபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் பெரியசாமி (வயது 70). விவசாயி. இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், சிவக்குமார், கோவிந்தசாமி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பெரியசாமி பொம்மராஜூபுரம் கிராமத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து வந்தார். இவரது இடத்திற்கு அருகே அதே பகுதியை சேர்ந்த ரத்தினம் என்பவரது நிலம் உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்த வந்ததாக கூறப்படுகிறது. இதைபோல் பெரியசாமியின் உறவினரான பழனி என்பவருடனும் நிலத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெரியசாமி தனது நிலத்தில் பயிரிட டிராக்டர் மூலம் உழ சென்றார். அப்போது ரத்தினம், பழனி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் உழவு பணி மேற்கொள்ள முடியாமல் பெரியசாமி மனஉளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெரியசாமி, ரத்தினம் வீட்டின் முன்புறம் உள்ள வராண்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருத்தணி போலீசார் பெரியசாமி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story