கட்டுமான கடையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ - அதிகாலையில் நடந்த பயங்கரம்..!


கட்டுமான கடையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ - அதிகாலையில் நடந்த பயங்கரம்..!
x

ராஜபாளையம் அருகே கட்டுமான கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் சுமார் 50 லட்சம் எலக்ட்ரிக் பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பெரிய சுரைக்காய் பட்டியை சேர்ந்த பசும்பொன் என்பவர் புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் உள்ள ஐ.என்.டி.யு.சி நகர் எதிரே எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார்.

தளத்தை இரண்டாக பிரித்து, கீழ் பகுதியில் மின் மோட்டார்கள், நீர் மூழ்கி மோட்டார்கள், சின்டெக்ஸ் தொட்டிகள், டைல்ஸ் பொருட்கள், இரும்பு வலைகள் மற்றும் மேல் பகுதியில் பிவிசி குழாய்கள், மின் வயர்கள், போர்வெல் குழாய்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான எலக்ட்ரிக் பொருட்களை தேக்கி வைத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையின் ஒரு பகுதியில் பற்றிய தீ, கடையின் அனைத்து இடங்களிலும் இருந்த பெருட்களிலும் பற்றி எரிந்தது. சாலையில் சென்றவர் அளித்த தகவலின் பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் தலைமையில் 10 பேர் கொண்ட மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.


2 மீட்பு வாகனங்கள் மற்றும் ஒரு தனியார் டிராக்டர் மூலம் கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக கடையில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடக்கத்தில் ஜன்னலை உடைத்து தீயை கட்டுப்படுத்த முடியாமல் போகவே, ஜேசிபி வாகனம் மூலம் கடையின் கதவை உடைத்து தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் சுமார் ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகியிக்கலாம் என கூறப்படுகிறது. மின் கசிவே விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story