மயிலாடுதுறை: காதலிக்க மறுத்த இளம்பெண்ணை நள்ளிரவில் வீடுபுகுந்து கடத்திய கும்பல் - பரபரப்பு சம்பவம்


மயிலாடுதுறை: காதலிக்க மறுத்த இளம்பெண்ணை நள்ளிரவில் வீடுபுகுந்து கடத்திய கும்பல் - பரபரப்பு சம்பவம்
x

மயிலாடுதுறை அருகே 15 க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் வீடுபுகுந்து இளம்பெண்ணை கடத்தி சென்ற நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை:

தஞ்சை, ஆடுதுறை கஞ்சமேட்டுத் தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் விக்னேஸ்வரன் (வயது 34). இவர், மயிலாடுதுறையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது பட்டதாரி பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காததால் அவருடன் பழகுவதை நிறுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விக்னேஷ்வரன் தான் காதலிப்பதாகக் கூறி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 2 முறை புகார் அளித்த நிலையில், போலீசார் இனி அந்த பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது அனுப்பியுள்ளனர் என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 12-ஆம் தேதி விக்னேஷ்வரன் அப்பெண்ணை கடத்த முயற்சித்துள்ளார். அப்போது அவரிடம் இருந்து தப்பித்த இளம்பெண் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு பைக் மற்றும் காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் 15-க்கும் மேற்பட்டோர், அப்பெண் வீட்டுக்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்த்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் முடுக்கி விடப்பட்டனர்.

இந்த நிலையில் போலீசார் நடத்திய தீவிர தேடுதலில் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே இளம்பெண் மீட்கப்பட்டார். மேலும் இளம்பெண்ணை கடத்தி சென்ற விக்னேஷ்வரன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடு புகுந்து இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story