புதுக்கோட்டை அருகே தீ விபத்தில் ஓட்டல் எரிந்து நாசம்


புதுக்கோட்டை அருகே தீ விபத்தில் ஓட்டல் எரிந்து நாசம்
x

புதுக்கோட்டை அருகே தென்னங்கீற்று கொட்டகையில் பரவிய தீயால் ஓட்டல் முழுவதும் எரிந்து நாசமானது.

புதுக்கோட்டை

ஓட்டலில் தீ

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகேயுள்ள புளிச்சங்காடு- கைகாட்டி பகுதியில் சையது சுல்தான் என்பவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் ஊழியர்கள் நேற்று காலை வழக்கம்போல் சமையல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இரும்பு புகை போக்கி வழியாக ஏற்பட்ட அதிக நெருப்பு காரணமாக ஓட்டலில் குளிர்ச்சியான சூழலை உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டு இருந்த தென்னங்கீற்று கொட்டகையில் தீ பரவியது.

இதனைகண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை.

போலீசார் விசாரணை

இதையடுத்து, அப்பகுதி மக்கள் கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் ஓட்டல் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

மேலும் அங்கு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஓட்டலில் இருந்த மேஜை, நாற்காலி உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது. இந்த சம்பவம் தொடர்பாக வடகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story