சபரிமலையில் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய வாரியத்தை அமைக்க கோரிக்கை விடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்


சபரிமலையில் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய வாரியத்தை அமைக்க கோரிக்கை விடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
x

கோப்புப்படம் 

சபரிமலை சன்னதி மேம்பாலத்தில் நெரிசலில் சிக்கிய சிறுமியை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் மகர ஜோதியினை முன்னிட்டு சபரிமலையில் வீற்றிருக்கும் சுவாமி ஐயப்பனை தரிசிக்க இந்தியா முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில், இந்த ஆண்டு மகர ஜோதியினை முன்னிட்டு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் திருக்கோயில் நிர்வாகம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

சபரிமலையில் உள்ள சுவாமி ஐயப்பனை தரிசிக்க வெளி மாநிலங்களிலிருந்து பக்தர்கள் சென்றாலும், தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கைதான் மிகவும் அதிகம். இந்த ஆண்டு, பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ள நிலையில், பம்பையிலிருந்து சன்னிதானம் செல்ல மட்டும் 20 மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளதாகவும், கூண்டுகளில் அடைக்கப்படும் பக்தர்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட எவ்வித உணவுப் பொருட்களும் வழங்கப்படுவதில்லை என்றும், கழிப்பறை வசதிகள் இல்லை என்றும், முறையான வரிசை பராமரிக்கப்படவில்லை என்றும், சில நேரங்களில் காவல் துறையினரின் தாக்குதலுக்கு பக்தர்கள் ஆட்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

சபரிமலை சன்னதி மேம்பாலத்தில் நெரிசலில் சிக்கிய சிறுமியை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. பெரும்பாலான பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிலர் இறந்துவிட்டதாகவும், ஆனால் இது குறித்த செய்தி வெளிவருவதில்லை என்றும் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்கள் தெரிவிக்கின்றனர். வட மாநிலங்களில் தமிழர்கள் பாதிக்கப்பட்டால் குரல் கொடுக்கும் முதல்-அமைச்சர், சபரிமலையில் தமிழக பக்தர்கள் தாக்கப்படுவதையும், அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பதையும் பற்றி குரல் கொடுக்காதது வியப்பாக இருக்கிறது.

இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்படாத வகையில், திருமலையில் இருப்பதுபோன்று, அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய ஓர் வாரியத்தினை சபரிமலையில் அமைக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்ற கோரிக்கையினை கேரள அரசுக்கு முதல்-அமைச்சர் விடுக்க வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story