பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து ஆய்வு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடைபெற்றது


பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து ஆய்வு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
x

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரம் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரம் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். வளர்ச்சி கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான ரிஷப், சப்-கலெக்டர் (பயிற்சி) கேத்ரின் சரண்யா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் மலர்விழி, தனித்துணை ஆட்சியர் மதுசூதணன், மாவட்ட சமூக நல அலுவலர் லலிதா சுதாகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் காயத்திரி சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 23-ந் தேதி வரை மாவட்ட அளவிலும், அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள், மற்றும் தொடர்புடைய பிற துறைகள் மூலம் விழிப்புணர்வு கூட்டம், பேரணி, துண்டு பிரசுரம் வழங்குதல், சுவர் விளம்பரம், கோலப்போட்டி, பேச்சுப்போட்டி, பாட்டுப் போட்டி, ஒவியப் போட்டி, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு திரைப்படங்கள், குறும்படம் தயாரித்தல், இரவில் மெழுகுவர்த்தி ஏந்தி நடைப்பயணம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவிகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைப்பதற்கான செயல்கள் முன்னதாகவே தடுக்கப்படுகிறது. அத்தகைய நடவடிக்கை மாணவிகளின் எதிர்காலத்திற்கான உயர்கல்வி பயிலவும், வாழ்க்கையில் சிறந்து விளங்கவும் உறுதுணையாக உள்ளது என்று கலெக்டர் கூறினார்.

பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தில் 68,724 மாணவிகளின் பெற்றோர்களிடமிருந்து குழந்தை திருமணம் எதிர்ப்புக்கான உறுதிமொழி ஏற்பினை அஞ்சல் வழியாக பெறப்பட்டது.

மேலும் பல்வேறு துறை அலுவலகங்கள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வினை மேலும் விரிவுபடுத்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அந்த அஞ்சல் அட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டது. அவ்வாறு காட்சிப்படுத்தப்பட்ட அஞ்சல் அட்டைகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story