முன்விரோத தகராறில் கிரிக்கெட் மட்டையால் அடித்து ரவுடி கொலை


முன்விரோத தகராறில் கிரிக்கெட் மட்டையால் அடித்து ரவுடி கொலை
x

துரைப்பாக்கம் அருகே முன்விரோத தகராறில் கிரிக்கெட் மட்டையால் அடித்து ரவுடி கொலை செய்யப்பட்டார்.

சென்னை

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகிநகர் பகுதியை சேர்ந்தவர் நித்யா என்ற பல்லு நித்யா (வயது 34). ரவுடியான இவர் மீது கண்ணகிநகர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

அதே பகுதியைச் சேர்ந்தவர் வீரமருது (34). ரவுடியான இவர் மீது செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவருக்கும் இடையே அந்த பகுதியில் யார் பெரிய ரவுடி? என்பதிலும், கஞ்சா விற்பனை செய்வதிலும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

இந்த முன்விரோதம் காரணமாக நித்யாவை கொலை செய்ய வீரமருது மற்றும் அவருடைய நண்பர்களான வசந்த், தினேஷ், அபி, மாட்டு மணி, குளவி குணா ஆகியோர் திட்டமிட்டனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு வீரமருது மற்றும் அவரது நண்பர்கள் நித்யாவை மது அருந்த வரும்படி அழைத்தனர். பின்னர் அனைவரும் துரைப்பாக்கம் அடுத்த காரப்பாக்கம் இந்திரா காந்தி முதல் குறுக்கு தெருவில் உள்ள காலி மைதானத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.

போதை தலைக்கு ஏறியவுடன் ரவுடி நித்யாவை வீரமருது மற்றும் அவரது நண்பர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கிரிக்கெட் மட்டையால் அடித்ததுடன், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

பின்னர் வீரமருது மற்றும் அவரது நண்பர்கள் எதுவும் தெரியாததுபோல் 108 ஆம்புலன்ஸ் மூலம் நித்யாவை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நித்யா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கண்ணகிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமருதுவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் 5 பேரையும் தேடி வருகின்றனர்.


Next Story