கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை தந்தை கண்டித்ததால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை


கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை தந்தை கண்டித்ததால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை
x

கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

கல்லூரி மாணவர்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலாங்காடு ஒன்றியம் சந்தான கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. சமையல்காரர். இவருக்கு துளசிதாஸ் என்ற மகனும், குமுதவல்லி என்ற மகளும் உள்ளனர். இவருடைய மகன் துளசிதாஸ் (வயது 17). இவர் திருத்தணி அரசு கல்லூரியில் பி.ஏ.வரலாறு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 27-ந் தேதி சுந்தரமூர்த்தி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, மகன் துளசிதாஸ் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட சுந்தரமூர்த்தி கல்லூரிக்கு சென்று படிக்காமல் ஊர் சுற்றுகிறாயே என துளசிதாசை கண்டித்துள்ளார்.

விஷம் குடித்து தற்கொலை

இதையடுத்து தந்தை கண்டித்ததால் மனமுடைந்த துளசிதாஸ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி (விஷம்) மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான துளசி தாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கனகம்மாசத்திரம் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story