'நீட்' தேர்வு எழுதிய மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை... குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் விபரீதம்


நீட் தேர்வு எழுதிய மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை... குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் விபரீதம்
x

‘நீட்’ தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வெள்ளாலனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஜீவிதா என்ற மகளும், பரமேஸ்வரன் என்ற மகனும் உண்டு. மகள் ஜீவிதா நீட் தேர்வில் வெற்றி பெற்று சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

மகன் பரமேஸ்வரன் (வயது 17) நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ்-2 முடித்து விட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்று கடந்த 7-ந் தேதி நடைபெற்ற நீட் தேர்வை எழுதி இருந்தார்.

இந்த நிலையில் மாணவர் பரமேஸ்வரன் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை செந்தில்குமார் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில்புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது மகன் பரமேஸ்வரன் நீட் தேர்வு எழுதியிருந்தான். தேர்வை சரியாக எழுதவில்லை. இதனால் மதிப்பெண் குறைவாக வந்து விடும் என கூறினான். இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக பயத்தில் இருந்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பரமேஸ்வரன் வீட்டு மாடியில் உள்ள அறைக்கு சென்றவன் வெகு நேரமாகியும் கிழே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து மாடிக்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தான்.

இவ்வாறு அந்த புகாரில் அவர் கூறி உள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story