சாலையோரம் நின்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி ஆசிரியர் பலி


சாலையோரம் நின்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி ஆசிரியர் பலி
x

கும்மிடிப்பூண்டி அருகே கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பழவேற்காடு சாலையில் வசித்து வந்தவர் கிருஷ்ணன் (வயது 75). ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவருக்கு மீனாட்சி (65) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

நேற்று காலை கிருஷ்ணன், தனது மோட்டார் சைக்கிளில் கும்மிடிப்பூண்டியில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வேற்காடு அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது அதே திசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் எதிர்பாரதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story