பூந்தமல்லி அருகே பட்டபகலில் வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


பூந்தமல்லி அருகே பட்டபகலில் வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x

பூந்தமல்லி அருகே பைக்கில் சென்ற வாலிபரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை

பூந்தமல்லி:

பூந்தமல்லி அடுத்த புளியம்பேடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் இண்டர்நெட் வயரை வைத்து கொண்டு இருவர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வழிமறித்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் மறைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்ட தொடங்கினார்கள்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பியோட முயற்சி செய்த நபரை விரட்டி சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் அந்த நபர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்து போனார். அவருடன் வந்த நபர் லேசான காயத்துடன் அங்கிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி உதவி கமிசனர் முத்துவேல் பாண்டி, இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் ஆகியோர் தலைமையில் வந்த போலீசார், கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வந்தனர். தலை மற்றும் கைகளில் கொலையாளிகள் வெட்டியதால் அந்த நபரின் முகம் முழுவதும் சிதைந்து முகமே தெரியாத அளவிற்கு படுகொலை செய்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்த ஸ்டீபன் (என்ற) ஸ்டீபன் ராஜ் (வயது 22), என்பதும் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை வழக்கு ஒன்றும் இருப்பது தெரியவந்தது.

தற்போது தனியார் நிறுவனத்தின் இன்டர்நெட் கேபிள் பதிக்கும் வேலை செய்து வந்ததாகவும் தனது நண்பர் ஸ்ரீதர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலை விசயமாக சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.

மேலும் இந்த கொலைக்கு காரணம் ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் முன் விரோதம் உள்ளதா? என்ற கோணத்தில் பூந்தமல்லி போலீசார் நான்கு தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story