பொள்ளாச்சி: 91 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு 4 ஆண்டு ஜெயில்


பொள்ளாச்சி: 91 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு 4 ஆண்டு ஜெயில்
x

பொள்ளாச்சி அருகே மூதாட்யை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோவை:

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 91 வயதான மூதாட்டி வீட்டின் அருகே உள்ள ஒரு அறையில் படுத்து இருந்தார். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி இரவு 11 மணிக்கு திடீரென்று அந்த மூதாட்டி அதிக சத்தத்துடன் அலறினார்.

உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து பார்த்தபோது பொள்ளாச்சி நேதாஜி நகரை சேர்ந்த மைதீன் (வயது 21) என்ற வாலிபர் அந்த மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்து கொண்டு இருந்தார். அவர் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இது குறித்த புகாரின்பேரில் பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் பலத்காரம் செய்ய முயற்சி, அத்துமீறி வீட்டிற்குள் நுழைதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியை மைதீனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த கோர்ட்டின் விசாரணை முடிந்ததை தொடர்ந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினிதேவி, குற்றம் சாட்டப்பட்ட மைதீனுக்கு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பிரிவுக்கு 2 ஆண்டு சிறையும், ரூ.500 அபராதமும், பலாத்காரம் செய்ய முயற்சி செய்த பிரிவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியதுடன், இந்த தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார், மைதீனை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜிஷா ஆஜராகி வாதாடினார்.


Next Story