புழல் அருகே பொம்மை-பலூன் குடோன்களில் பயங்கர தீ விபத்து


புழல் அருகே பொம்மை-பலூன் குடோன்களில் பயங்கர தீ விபத்து
x

40-க்கும் மேற்பட்ட தீயணைப்புவீரர்கள் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

புழல்,

சென்னை அடுத்த புழல் கேம்ப் அண்ணா நினைவு நகர் அருகே சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரஹீம் என்பவருக்கு சொந்தமான பலூன் குடோனும், மேல் தளத்தில் வேலூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பருக்கு சொந்தமான பொம்மை குடோனும் இயங்கி வருகின்றன.

இந்த குடோனில் பொம்மைகளையும், பலூன்களையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வரப்படுகிறது. இந்த நிலையில் குடோனில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென கீழ் தளத்தில் தீப்பற்றியது.

இந்த தீ மள, மளவென பற்றி எரிந்ததில் மேல்தளத்திலும் பற்றிக்கொண்டது. இதனால் பொம்மை குடோனும் பலூன் குடோனும் பயங்கரமாக எரிய தொடங்கியது.

இது குறித்து தகவல் அறிந்ததும், செங்குன்றம், மாதவரம், வியாசர்பாடி, அம்பத்தூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து 8-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து 40-க்கும் மேற்பட்ட தீயணைப்புவீரர்கள் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். இதைத்தொடர்ந்து சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


Next Story